யாழ். செல்லவில்லை நிஷா பிஸ்வால் – சிறிலங்கா பயணம் நிறைவு
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்குச் செல்லாமல் இன்றுடன் தனது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளார்.
நேற்று அதிகாலை இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த அவர், கொழும்பில் திவிரமான சந்திப்புகளில் ஈடுபட்டார்.
இம்முறை அவரது பயணத்தின் போது, நேரம் போதாமையினால், கொழும்பை மையப்படுத்தியதாகவே சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேரம் போதாமையால் அவர் யாழ்ப்பாணம் செல்லவில்லை.
எனினும், யாழ்ப்பாணம் செல்லும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்படவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரைச் சந்தித்துப் பேசிய நிஷா பிஸ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.