யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.
1983ஆம் ஆண்டு, ஜூலை 23ஆம் நாள் திருநெல்வேலியில் 13 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காயப்படுத்தப்பட்டனர்.
தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன.
தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்த கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.
இதனை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.