வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்க சம்பந்தனிடம் தாய்லாந்து பிரதமர் உறுதி
தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கும்படி, தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சாவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா, இன்று கொழும்பில் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களின் போது இரா.சம்பந்தன், ”போரினால், சிறிலங்கா பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை. எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியலமைப்பின் ஊடாக சமாதானமான ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கிறோம்.
அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வினைக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு,கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் தேவையாக உள்ளது. அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியது அவசியம்.
தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் சீனித் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளமை வரவேற்கத்தக்கது.
இந்த வகையிலான முதலீடுகள் போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டு வரப்படவேண்டும்.
மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் போர் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
புதிய முதலீடுகள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாது, முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை சிறிலங்காவில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என்று உறுதியளித்தார்.
எதிர்காலத்தில் அத்தகைய முதலீடுகளுக்கு ஆதரவு வழங்குமாறும் அவர், இரா.சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.