சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் – சம்பந்தனிடம் சுஷ்மா வாக்குறுதி
புதிய அரசியலமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா தேவையான அழுத்தங்களை கொடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த, இந்திய வெளிவிவகார அமைச்சரை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசிய போதே இந்த உறுதிமொழியை அளித்தார்.
புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுக்காலை 11.45 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார்.
சுமார் அரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் இழுத்தடிக்கப்படாமல் துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இனிமேலும் தாமதம் செய்யாமல், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி, பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்துள்ள இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்தியா தேவையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குத் தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா நிச்சயம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.