சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு சந்திப்பு – காணிகள் விடுவிப்பு குறித்து பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களி்ல் சிறிலங்கா படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், சிறிலங்கா அதிபரைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இரா.சம்பந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கு தான் எதிரானவர் அல்ல என்று சிறிலங்கா அதிபர் எம்மிடம் தெரிவித்தார்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் அல்லது மாற்று இடங்கள் வழங்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.
எனினும், புதுக்குடியிருப்பு காணிகளை விட்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்னும் சில நாட்களில் வெளியேறுவர் என்றும் அவர் கூறினார்.
சிறிலங்கா படையினர் வசம் உள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய காணி விடுவிக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார் என்று சம்பந்தன் குறிப்பிட்டார்.