இந்தியத் தூதுவருக்கு இராப்போசன விருந்தளித்த அமெரிக்க தூதுவர் – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு
அண்மையில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்ட தரன்ஜித் சிங் சந்துவுக்கு, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இராப்போசன விருந்து அளித்து கௌரவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் வதிவிடத்தில் இடம்பெற்ற இந்த இராப்போசன விருந்தில், சிறிலங்கா அரச மற்றும் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பங்கேற்றனர்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, ஏரான் விக்கிரமசிங்க, வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் இந்த இராப்போசன விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள தரன்ஜித் சிங் சந்து முன்னர், வொசிங்டனில் இந்தியத் துணைத் தூதுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.