சிறிலங்காவின் சூரிய சக்தி மின் திட்டங்களில் ஜப்பான் 15 மில்லியன் டொலர் முதலீடு
சிறிலங்காவில் சூரிய சக்தி மின் திட்டங்களில் 15 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Shibatasyoji Co. Ltd, Sawada Co. Ltd and WQ Inc. ஆகிய ஜப்பானிய நிறுவனங்களே சிறிலங்காவில் சூரிய சக்தி மின்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளன.
ஜப்பானிய நிபுணர்கள் விரிவான தொடர் ஆய்வுகளை நடத்தியதன் பின்னர், சூரிய சக்தி மின் திட்டங்களுக்கு மிகவும் சாதகமான நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவை கண்டறிந்துள்ளனர்.
10 மெகாவாட் திறனுள்ள சூரியசக்தி மின் திட்டத்தை 10 மில்லியன் டொலர் செலவில் அமைக்கும் திட்டத்தில் கடந்த 3ஆம் நாள், ஜப்பானிய நிறுவனங்கள் இரண்டு கையெழுத்திட்டுள்ளன.
சிறிலங்காவில் நீர்மின் உற்பத்தி மோசமடைந்து வருகின்ற நிலையிலும், மாற்று மின்உற்பத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத சூரிய சக்தி மின் திட்டங்களில் சிறிலங்கா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.