மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதம் – போராட்டக்காரர்களின் உடல் நிலை மோசமடைகிறது
சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை தொடக்கம் வவுனியா அஞ்சலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை பலவீனமடையத் தொடங்கியுள்ளது.
வவுனியா மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலையை பரிசோதித்தனர்.
இதன் போது இரண்டு தாய்மாரின் உடலில் சீனி அளவு குறையத் தொடங்கியுள்ளதால், எந்த நேரத்திலும் மயக்கமடையலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு மயக்கமடைந்தால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில், மருத்துவ சிகிச்சையை பெறப் போவதில்லை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்களும், பிரமுகர்களும், உண்ணாவிரத மேடைக்கு வந்து செல்வதையும் அவதானிக்க முடிகிறது.