கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சீன இராணுவத்திடமா? – ரணில் பதில்
நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையும், விமானப்படையுமே உறுதிப்படுத்துதே தவிர, சீனர்கள் அல்ல என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இந்த விடயத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
அம்ஸ்ரடாம், சிங்கப்பூர் மற்றும் உலகின் பிற பகுதிகளில், அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.
எனவே, சீன இராணுவம் கொழும்பு நிதி நகரத்தில் நிறுத்தப்படும் என்ற கவலை தேவையற்றது.
கொழும்பு துறைமுக நகரத்தில், சீனாவுக்கு நில உரிமை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியிருந்தது. ஆனால், அந்த உடன்பாட்டை நாம் ரத்துச் செய்து, அந்த நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கே நாம் வழங்கியிருக்கிறோம்.
எந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கும் காணி விற்கப்படாது. அது அம்பாந்தோட்டை விடயத்திலும் பொருந்தும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.