சம்பூர், பலாலி, காங்கேசன்துறை திட்டங்கள் குறித்து இந்தியா- சிறிலங்கா அமைச்சர்கள் பேச்சு
பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4ஆம், 5ஆம் நாள்களில், இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் மூலோபாய அபிவிருத்தி, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களின் போது, இருதரப்பு பொருளாதார, வர்த்தக திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறிப்பாக சம்பூர் அனல் மின் திட்டத்தை செயற்படுத்துதல், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.