சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனராக இன்று பொறுப்பேற்கிறார் இந்திரஜித் குமாரசுவாமி
சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று பதவியேற்கவுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படவுள்ளது.
புதிய மத்திய வங்கி ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். அதையடுத்து, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சிறிலங்கா அதிபரைச் சந்தித்திருந்தார்.
இன்று அவர் முறைப்படி, சிறிலங்கா அதிபரிடம் இருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, மத்திய வங்கி ஆளுனர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.
கலாநிதி இந்திரஜித், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், அரசியலமைப்பு சபை உறுப்பினருமான ராதிகா குமாரசுவாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.