வடக்கில் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் நிறுத்தப்படாது – ஆளுனர்
வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த திட்டம் நிறுத்தப்படமாட்டாது என்றும் ஆனால் பல்வேறு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்குச் செவ்வியளித்துள்ள அவர், இதுதொடர்பான தனது பரிந்துரையை வெளிப்படுத்த மறுத்துள்ளார்.
ஆனால், இந்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில வசதிகள் பயனாளிகளுக்குத் தேவையற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த திட்டத்தில் எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு, கணினி, மற்றும் தொலைக்காட்சியும் அடங்கியுள்ளன.
இந்த திட்டத்தை எதிர்த்தால், தம்மைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படுவதாக மக்கள் நினைப்பார்கள்.
மக்கள் இந்த திட்டத்தை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் ஏழைகள். அவர்கள் இதுபோன்ற நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் 65 ஆயிரம், பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாணசபை கோரியிருந்தது.
உருக்கினால் தயாரிக்கப்படும் இந்த வீடுகள் வடக்கின் காலநிலைக்கு ஒவ்வாதவை என்றும், கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,