சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு – கொழும்பில் வைத்து சந்தேகநபரிடம் விசாரணை
சாவகச்சேரியில், தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும் எட்வேட் ஜூலியன், மேலதிக விசாரணைக்காக , தீவிரவாத விசாரணைப் பிரிவினால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்கவினால், தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூத்த காவல்துறை மா அதிபர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரமேசின் மனைவியும் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த மாதத்தில் மட்டும், போருடன் தொடர்புடைய 10 ஆயிரம் இராணுவப் பொருட்கள் வடக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.