சீனாவுடன் பல்வேறு முக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் ரணில்
அடுத்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணத்தின் போது, சீன அதிகாரிகளுடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடும் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும், மத்தல விமான நிலையம் ஆகியவற்றுடன் தொடர்புடைய திட்டங்கள் குறித்தே இந்த உடன்பாடுகள் செய்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில், மத்தல விமான நிலையத்தை ஒட்டியதாக 400 ஏக்கர் நிலத்தில் களஞ்சியசாலை ஒன்றை அமைக்கும் திட்டமும் உள்ளடங்கியுள்ளது.
அதேவேளை, சீனாவின் முன்னணி பொதிகள் பரிமாற்ற சேவை நிறுவனத்துடன், பங்காளராக இணைந்து கொள்ளும் உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளதாக, சிறிலங்காவின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் ஈஸ்ரேன் எயர்லைன்ஸ் நிறுவனம் மத்தலவில் இருந்து சீனாவின் பல்வேறு இடங்களுக்கு வாரத்தில் இரண்டு சேவைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, ஆண்டுக்கு 5 இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது ஒன்றரை இலட்சம் சீனர்கள் சிறிலங்காவுக்கு ஆண்டு தோறும் சுற்றுலா வருகின்றனர்.
சிறிலங்கா பிரதமருடன், நிமால் சிறிபாடி சில்வா, மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
சீனபொதுவுடமை சமுதாய அனம்ப்பு முறமையான தேசம் இத்தேசத்துடன் இலங்கை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை வரவேற்க வேண்டும் இதில் எந்தவித உள்நோக்கங்ளும் அற்றவையாக இருக்க வேண்டும் மக்கள் நலன் பேணப் படவேண்டும் முக்கியமாக இலங்கையரின் தொழில் வாய்ப்பு இறமை இவையாவும் பாதுகாக்கப்ட வேண்டும் சீனாவுடன் மட்டுமல்ல எந்தவொரு நாடாக இருந்தாலும் சரி எமது தேசமும் எமது மக்களின்நலனும் 100% பாதுகாக்கப்ட வேவேண்டும்