இந்தியாவின் மற்றொரு மாநிலமாக சிறிலங்கா மாறும் – எச்சரிக்கிறார் மகிந்த
தற்போதைய நிலைமைகள் தொடர்ந்தால், இந்தியாவின் மற்றொரு மாநிலமாக சிறிலங்கா மாறும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக, நேற்று முன்னிலையாகி சாட்சியமளித்த பின்னரே, அவர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
”புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எல்லா அபிவிருத்தி திட்டங்களும் முடங்கிப் போயிருக்கின்றன. படிப்படியாக இந்த அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது.
ஆனாலும், ஊடக நிறுவனங்கள் அரசாங்கத் தலைவர்களை விமர்சிக்காமல், அவர்களைப் போற்றி வருகின்றன.
இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது.
தற்போதைய நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால், சிறிலங்கா, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகவே மாறும்” என்றும் அவர் தெரிவித்தார்.