சரணடைந்தோர் பட்டியல் 58ஆவது டிவிசனிடம் உள்ளதா என்று தெரியவில்லை – இராணுவப் பேச்சாளர்
போரின் இறுதிக் கட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும், நீதிமன்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்கள் பற்றிய பட்டியலை ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58 ஆவது டிவிசன் தலைமையகத்தில் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
ஆனால், நீதிமன்றம் ஊடாக இது தொடர்பாக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அந்த விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் .
காணாமற்போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் சிறிலங்கா இராணுவம், முழுமையாக ஒத்துழைப்பைத் தரும்.
58 ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வருவதால், அது குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.