அலரி மாளிகையில் ரணிலை சந்தித்துப் பேசினார் சுஸ்மா – திருமலையில் முதலீடு செய்ய அழைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக கொழும்பு வந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று பிற்பகல் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பை வந்தடைந்த சற்று நேரத்தில் இந்தப் பேச்சுக்கள், அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்தாகவும், பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாகவும், இந்தியத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார வலயத்தில், இந்திய முதலீடுகளை மேற்கொள்ள, சிறிலங்கா பிரதமர் இந்தச் சந்திப்பின் போது அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகள், முன்னேற்றங்கள் குறித்தும், அவர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர் சாகல ரத்நாயக்க, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா உள்ளிட்டோரும், இந்திய வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.