மேலும்

அமெரிக்க – சிறிலங்கா படைகளின் அட்லஸ் ஏஞ்சல் II கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

அமெரிக்க – சிறிலங்கா படைகள் நேற்று அட்லஸ் ஏஞ்சல் II என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

சி-130 விமானப் பராமரிப்பு, நகர்ப்புறத் தேடல் மற்றும் மீட்பு, சம்பவக் கட்டளை அமைப்புகள், கட்டுமானப் பொறியியல், நிலச்சரிவு மீட்பு, மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு, வெடிபொருள் அபாயங்கள் உள்ளிட்ட பேரிடர் மீட்புக்கு அவசியமான துறைகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், இணைந்து பயிற்சி பெறவும் இராணுவத்தினரையும் துறைசார் நிபுணர்களையும் இந்தப் பயிற்சி ஒன்றிணைக்கிறது.

5 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 4 ஆம் நாள் நிறைவடையும்.

பிரித்தானியாவும், பங்களாதேசும், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்கின்றன.

இந்தப் பயிற்சி சிறிலங்கா விமானப்படைத் தளமான கட்டுநாயக்கவிலும், கண்டியிலும் நடைபெறுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் அமெரிக்க மற்றும் சிறிலங்கா படைகளுக்கு இடையேயான நடைமுறை ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் இந்தப் பயிற்சி வலுப்படுத்தும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்,

“பேரிடர்கள் ஏற்படும்போது தயாராக இருப்பதில் அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் பொதுவான ஆர்வம் உள்ளது.

அமெரிக்கர்களும் இலங்கையர்களும் இணைந்து பயிற்சி பெறுவது, நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது என, நமது கூட்டாண்மை நடைமுறையில் எப்படி இருக்கும் என்பதற்கு அட்லஸ் ஏஞ்சல் ஒரு வலுவான எடுத்துக்காட்டாகும்.

மொன்டானா தேசியக் காவல்படை மற்றும் எமது பரந்த பாதுகாப்பு கூட்டாண்மை மூலம், பல ஆண்டுகால ஒத்துழைப்பை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம்.

இது அமெரிக்கக் குடிமக்களையும் எமது கூட்டாளிகளையும் பாதுகாக்க, உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பேண, மேலும் பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட இந்தோ-பசுபிக் பகுதிக்கு பங்களிக்க உதவும் தயார்நிலையை வலுப்படுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *