பொங்கலுக்கு முன்னர் சிறிலங்கா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சிறிலங்காவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் நாள்களில் அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட சிறிலங்கா-சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏனைய மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு முயற்சிகள் போன்ற பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மூத்த அரசாங்கத் தலைவர்களுடனும், ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவுடனும், சீன வெளியுறவு அமைச்சர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன- சிறிலங்கா இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவதற்காக, 2022 ஜனவரியில் கடைசியாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
