40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் ரணில்
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“அண்மையில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்குப் பின்னால் உள்ள குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்ற வாதங்கள் உள்ளன; அது உண்மைதான்.
இருப்பினும், 1977 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் தேர்தலுக்குப் பிந்தைய பாரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது.
அதற்கு ரணிலும் ஜே.ஆரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள், அந்த நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
1981 இல் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் மற்றும் 1983 ஜூலை கலவரம் உள்ளிட்ட முக்கிய சம்பவங்களின் போது அமைச்சரவையில் அவரது பங்கிற்கு ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டியவர்.
1987 ஆம் ஆண்டிற்கும் 1990ஆம் ஆண்டிற்கும் இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பட்டலந்த சித்திரவதைக் கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார், இது தொடர்பாக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் அவரைக் கைது செய்யவில்லை.
2015 ஆம் ஆண்டு நடந்த பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் அவரை யாரும் கைது செய்யவில்லை.
எனவே, 40 ஆண்டுகளுக்கு முன்னர், மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார்.
இங்கு விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமைகளை நேர்மையுடனும் தடையின்றியும் செய்ய முடியும்,” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.
