அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும்
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக, அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சுப்ரீம் சட் செய்மதி பற்றிப் பேசுவதன் மூலம் அமைச்சர் சமரசிங்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சவால் விடுத்துள்ளார்.
அமைச்சர் வெளியே பேசுவதற்குப் பதிலாக, இந்த விடயத்தை அரசாங்கத்திற்குள் கலந்துரையாடி, பிரதமரின் கருத்துகள் குறித்து தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இன்று அமைச்சர்கள் நடந்து கொள்வது போல் அமைச்சரவை ஒருபோதும் செயற்பட்டதில்லை.
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் முறை.
அமைச்சர்களாக இருந்த போது எனது தந்தை, காமினி திசாநாயக்க மற்றும் ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ் ஆகியோர் 1980 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடிமை உரிமைகளை ஒழிக்கும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்தனர்.
அமைச்சரவைக்குள் இந்த நடவடிக்கைக்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இருப்பினும், இன்று நடந்ததைப் போல அவர்கள் பொதுவில் எதையும் கூறவில்லை.
அமைச்சர் சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும், அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதைச் செய்யத் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.