இராணுவத் தளபதி நியமனத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது – கோத்தா
போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தான் பாதுகாப்பேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா படையினரின் குடும்பத்தினர் மத்தியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
“சிறிலங்கா படையினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன.
அது நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கின்றது.
புதிய இராணுவத் தளபதி நியமனத்துக்கு சில மேற்குலக நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
சிறிலங்கா இறைமையுள்ள ஒரு நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது.” என்றும் அவர் தெரிவித்தார்.
ஐநா அமைதிப்படையில் பணியாற்ற சிறிலங்கா படையினருக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாக சற்று முன்னர், இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.