நேற்றைய கூட்டத்திலும் இணக்கப்பாடு இல்லை
அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமாலை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் முக்கியமான கூட்டம் இடம்பெற்றது. எனினும் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று மாலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பிரதிநிதி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாவிடினும், தொடர்ந்து பேச்சுக்களை நடத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இணக்கப்பாட்டின் அடிப்படையில் அதிபர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என சஜித் பிரேமதாச கூறினார்.
அதிபர் வேட்பாளர் விடத்தில் விரைவில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.