அவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்
நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பது தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே ஏற்பாடு செய்திருந்தார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீரிகமவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
”அதிபர் சிறிசேன கடந்த வியாழக்கிழமை காலை எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கலாமா என்று கேட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து விவாதிப்பதில் தவறில்லை என்று நான் பதிலளித்தேன்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை ஐதேகவில் விவாதிக்கப்படவில்லை என்பதையும் அவருக்கு நினைவுபடுத்தினேன்.
அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்தேன், நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பது குறித்து அமைச்சர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர்.
அதன்பிறகு, கருத்து வேறுபாடுகள் காரணமாக அமைச்சரவையில் சட்ட வரைவை அங்கீகரிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபருக்கு அறிவித்தேன்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிக்க முடியாது என்று வலியுறுத்தினேன்.
எனினும், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குள் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டினோம், ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.