மேலும்

மகிந்த – மைத்திரி நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் நேற்றிரவு சந்தித்து, நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பது குறித்தே இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. எனினும் இந்தப் பேச்சுக்கள், வெற்றியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்துடன் எந்த வகையிலும் இணங்கிச் செயற்பட முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் வெற்றியடையாது போனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என, நேற்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *