மேலும்

பிரதமர் பதவியை குறி வைக்கிறார் மைத்திரி – அதிபர் தேர்தல் குறித்து மௌனம்

அதிபர் பதவியை விட பிரதமர் பதவியே அதிகாரம் கொண்டதாக மாறியிருப்பதால், அதன் மீதே இனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், 2020இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு, அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நேற்று நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,

“நாட்டின் தேசியம், கலாசாரம், மொழி, மதம் அனைத்தையும் மதித்து பாதுகாத்து செயற்பட்டது சிறிலங்கா சுதந்திரக் கட்சியே.

தற்போது நாட்டில் உள்ள கட்சிகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயல்படுகின்றனர் என நான் நாட்டு மக்களை கேட்க விரும்புகிறேன்.

நாட்டின் இறைமை கலாசாரத்தை பாதுகாத்து ஊழல் மோசடியற்ற நாட்டை கட்டியெழுப்ப செயற்படுபவர்கள் எத்தனை பேர்?

தமது சொந்த நிகழ்ச்சி நிரலின்படி செயற்பட்டு நாட்டைப் பற்றி சிந்திக்காமல் தவளைகள் போல அங்குமிங்கும் கட்சி தாவித் திரிவதிலேயே அவதானமாக செயற்படுகின்றனர். அவ்வாறான தலைவர்களே இன்று நாட்டில் மாற்ற முடியாத பிரச்சினைகளாகி உள்ளனர்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டை முன்னேற்றுவதற்கான தீர்மானம் அரசியல் தலைவர்களிடமே உள்ளது.

அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொள்ளும் உரிமையை சாதாரண மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் நாட்டின் நிலையான அபிவிருத்தி தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம், ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்பி நாட்டின் சட்டம் சகலருக்கும் சமமானதாக அமைவது முக்கியம்.

நான் 2015ஆம் ஆண்டு பெரும் சவால்களை வெற்றி கொண்டோம். அது தற்போது பலருக்கு மறந்துள்ளது.

நாம் மக்களுக்கு சிறந்தவற்றை நடைமுறைப்படுத்தும்போது மற்றத்தரப்பு நாட்டுக்கு பொருத்தமில்லாத செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பிரபுத்துவ அரசியலை கடைப்பிடித்து அனைத்தையும் வர்த்தக மயமாக்கவே அவர்கள் செயற்பட்டனர்.

அத்தகைய மோசமான அரசியலை இல்லாதொழிப்பதே எனது பொறுப்பாகியது. நாடு தற்போது மோசடி வணிகர்களின் பிடியின் அகப்பட்டுள்ளது. பிரபுத்துவ வணிக அரசியலே நடைமுறையிலுள்ளது.

கடந்த நாலரை ஆண்டுகளாக நாட்டுக்காக செயற்பட முடியாது இத்தகையோருக்கு எதிராக செயற்படுவதிலேயே எனது காலம் கழிந்தது.

அவ்வாறு நான் செயற்பட்டிருக்காவிட்டால் நாடு இதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

2015 இல் தமது தெரிவு தவறிவிட்டதாக ஒரு அனுபவமில்லாத அரசியல்வாதி கூறியிருக்கிறார். நான் அதிபராக தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் மேலாடையல்ல. கோவணத்துணியையும் அவர் இழக்க நேர்ந்திருக்கும் என அவருக்கு நான் கூற விரும்புகிறேன்.

கொழும்பு மாநகர சபை உட்பட  99 வீதமான உள்ளூராட்சி சபைகளின் ஊழலும் மோசடியும் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் ஊழல் மோசடி இல்லாத நிறுவனங்கள் உள்ளனவா என்று தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய வங்கி கொள்ளைக்காரர்கள் அனைவரும் அரசியலிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டவர்களே இப்போது அடுத்த தேர்தல் பற்றி பேசுகின்றனர்.

மத்திய வங்கி பிணைமுறியின் முக்கிய சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் தயாராகிவிட்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகளை சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு விட்டன.

நாட்டின் மாகாண சபை முறைக்கு ஆணி அடிக்கப்பட்டு விட்டது. மாகாண சபை தேர்தலை நிறுத்துவதற்கான முக்கிய நபராக பிரதமர் செயற்படுகின்றார். அதில் முதல் பிரதிவாதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு முக்கிய பொறுப்புள்ளது. நேர்மையான அரசியல் தலைமை நாட்டுக்கு தேவையாக உள்ளது.

தற்போது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மீண்டும் வடக்கு தமிழ் தலைவர்களிடம் இரகசிய பேச்சுகளை நடத்தி வருகின்றனர்.

புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதாக நாலரை ஆண்டுகளை வீணடித்து கோடிக்கணக்கான நிதியை விரயம் செய்துள்ளனர். எவருக்கும் எந்த திட்டமும் கிடையாது.

அடுத்து வரும் அதிபர் 19ஆவது திருத்தத்தின் படி எத்தகைய அதிகாரமும் இல்லாதவராகவே இருப்பார். பாதுகாப்பு அமைச்சு கூட அவரின் கீழ் இருக்காது. பிரதமருக்கே எல்லா அதிகாரமும் இருக்கும்.

அந்தவகையில் 2020 இல் அதிபர் அன்றி பிரதமரே பலமுள்ளவராக இருப்பார். நாம் அதனை உணர்ந்து செயற்படவேண்டும்.

நான் நிறைவேற்று அதிபராக இருந்து எந்த ஊழல் மோசடிகளிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டவன் அல்ல. நாட்டின் எந்த குடிமகனுக்கு எதிராகவும் எனது காலத்தில் துப்பாக்கி வெடித்ததில்லை. வீடுகளை எரிப்பதோ, ஊடகவியலளர்களை தாக்குவதோ எனது ஆட்சியில் இடம்பெறவில்லை.

மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழ்நிலையையே நாம் ஏற்படுத்தினோம்“ என்று தெரிவித்தார்.

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதா என்பது தொடர்பான நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அதுபற்றி அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த மாநாட்டில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, மற்றும் முன்னாள் பிரதமர் டிஎம்.ஜயரத்ன, முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஐதேகவின் அமைச்சரான அர்ஜூன ரணதுங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களும் கூட்டு எதிரணியைச் சேர்ந்தவர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, ஆகியோரும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *