மேலும்

வேட்புமனு கோரும் அறிவித்தல் செப்.20 இற்குப் பின் எந்த நேரமும் வெளிவரலாம்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் 20ஆம் நாளுக்குப் பின்னர், வெளியிடப்படும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் 20ஆம் நாளுக்கும், ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கும் இடைப்பட்ட ஏதேனும் ஒரு நாளில் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளியிடப்படக் கூடும். என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நொவம்பர் 10ஆம் நாளில் இருந்து டிசெம்பர் 8ஆம் நாளுக்கு இடைப்பட்ட காலத்துக்குள், அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சிகளின் செயலாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஓகஸ்ட் 9ஆம் நாள் இடப்பட்டுள்ள  தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்தக் கடிதங்கள், கட்சியின் செயலாளர்களுக்கு, நேற்று மாலையே கிடைத்துள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பமாயின், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்விப் ​பொதுத் தராதர சாதாரணத் தர தேர்வுகள் டிசெம்பர் 2ஆம் நாள் ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித், ​தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனால், நொவம்பர் 9ஆம்  நாளுக்கும், டிசெம்பர் 2ஆம் நாளுக்கும்  இடைப்பட்ட காலத்திலேயே அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *