குடியுரிமை துறப்பு ஆவணத்தை பெற்று விட்டார் கோத்தா- கம்மன்பில
அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோத்தாபய ராஜபக்ச கடந்து மே மாதமே பெற்று விட்டார் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
”கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பான இறுதி ஆவணத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த மே மாதமே, அனுப்பி விட்டது.
அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும், அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், அவரது பெயர் இடம்பெற்றிருக்கும்.
மார்ச் 31ஆம் நாள் வரை அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாமை குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் அவர் மே மாதம் இறுதி ஆவணத்தைப் பெற்று விட்டார்.
அந்த ஆவணத்தைப் பார்த்த சிலரில் நானும் ஒருவன், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை துறப்பு செயல்முறைகள் 100 வீதம் முடிந்து விட்டன” என்றும் அவர் கூறினார்.