மேலும்

அதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் உத்தரவை தடை செய்து உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போதே, சட்டமா அதிபர் தரப்பில் இந்த வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் யசந்த கோத்தாகொட தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதன்போது, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான  மூத்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல் நளின் புள்ளே,

‘மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் மற்றும் நேரத்தை சிறிலங்கா அதிபரே முடிவு  செய்ய வேண்டும். மனுதாரரின் நடவடிக்கைகள் சிறிலங்கா அதிபருக்கு எதிராக உள்ளது. இதனை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’ என்று அடிப்படை எதிர்ப்பு வாதத்தை முன்வைத்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை 9.30 மணிக்கு  மீண்டும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *