மேலும்

கைவிடப்பட்டது கல்முனை உண்ணாவிரதப் போராட்டம் – முஸ்லிம்களின் போராட்டமும் நிறைவு

கல்முனை வடக்கு தமிழ்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து நடத்தப்பட்டு வந்த  உண்ணாவிரத போராட்டம்  இன்று முற்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையில், உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தவர்களுடன், இன்று காலை கல்முனை காவல்துறை கண்காணிப்பாளர் ஹேரத் பேச்சுக்களை நடத்தினார்.

இதையடுத்தே, இந்தப் போராட்டத்தை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதுரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் போன்றவர்களும்,  அரச தரப்பில் இருந்தும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை  ஏற்றுக்கொண்டு, தமது உண்ணாவிரதப் போராட்டம்  இன்று காலை 10 மணியுடன்  நிறுத்தப்படுவதாக,  ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர்  தெரிவித்தார்.

கோரிக்கையில் தொடர்ந்தும் உறுதியாக இருப்போம் எனவும், குறிப்பிட்ட  காலப்பகுதிக்குள் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படா விட்டால் மீண்டும் மிகப்பெரியளவில் போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடைசெய்யக் கோரி கல்முனை முஸ்லிம் மக்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த சத்தியாக்கிரக போராட்டமும், இன்று  நண்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காவல்துறை கண்காணிப்பாளரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டும், தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதனாலும்,  சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவு செய்வதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  நாடாமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்  தெரிவித்தார்.

செய்தி உள்ளடக்கமும், படங்களும் – பாறுக் ஷிஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *