பசில் – கம்மன்பில இடையே வெடித்த மோதல் – விலக்குப் பிடித்தார் மகிந்த
கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கும், உதய கம்மன்பிலவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து மகிந்த ராஜபக்ச தலையிட்டு இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்தியுள்ளார்.
கூட்டு எதிரணியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பிலவும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனரான பசில் ராஜபக்சவுமே சொற்களால் மோதிக் கொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஏற்படும் வெற்றிடங்களை எவ்வாறு நிரப்புவது என்பது தொடர்பாக, உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு, பசில் ராஜபக்ச அளித்த பதிலே இருவருக்கும் இடையில் பெரும் சண்டையை மூட்டி விட்டுள்ளது.
பசில் ராஜபக்ச சில கடுமையான சொற்களைப் பயன்படுத்தி அளித்த பதில்களால் உதய கம்மன்பில ஆத்திரமடைந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உங்களின் தாளத்துக்கு ஆட முடியாது என்று அவர் கூற இதனால் இருவருக்கும் இடையில் கடும் சொற்போர் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச தலையிட்டு இந்த மோதலை நிறுத்தினார்.
இந்த மோதலின் போது, உதய கம்மன்பிலவின் நிலைப்பாட்டுக்கு வாசுதேவ நாணயக்காரவும் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.