மேலும்

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – பசில் ராஜபக்ச

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

”அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் கூட அதனைத் தான் நிராகரிப்பேன்.  அதிகளவு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் இருப்பதால், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் கிடையாது.

அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து மகிந்த ராஜபக்ச சரியான நேரத்தில் முடிவு செய்வார்.

நான் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. கட்சியின் எந்தப் பதவியிலும் நான் இல்லை.

ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதையோ, அங்கீகாரம் இல்லை என்பதையோ நான் நிராகரிக்கிறேன்.

நான் வடக்கில் இருந்து போட்டியிட்டால், எமது பக்கத்தில் வேறெந்த வேட்பாளரையும் விட அதிக வாக்குகளைப் பெற முடியும்.

அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தாப  ராஜபக்ச விரும்புகிறார். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவே இறுதியான முடிவை எடுப்பார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *