நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பான கருத்துக்களை கூறுமாறும் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு சிலர் ஆதரவளித்தனர். சிலர் கருத்துக்களை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், தமது 2015 தேர்தல் அறிக்கைக்கு அமைய, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சிறிலங்கா அதிபர் சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இதன்போது, நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.