மேலும்

மற்றொரு கடற்படைப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்யும் முயற்சியில் சிஐடி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் நெருங்கிய உதவியாளராக இருந்த கடற்படை அதிகாரி ஒருவரை, கைது செய்யும் முயற்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இறங்கியுள்ளனர்.

கொழும்பில் 11 பேரைக் கடத்தி கப்பம் கோரி, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே, குறித்த அதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நெருங்கியுள்ளனர்.

கடற்படைப் புலனாய்வுப் பிரிவில் தற்போது சீவ் பெற்றி ஒவ்விசராக அவர் பணியாற்றி வருகிறார். கடந்த 6ஆம் நாள், விசாரணைக்காக அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்திருந்தனர்.

எனினும், அவரை தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக பெப்ரவரி 25ஆம் நாள் வரை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலைப்படுத்த முடியாது என்று கடற்படையின் சார்பில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

மூத்த கடற்படை அதிகாரியின் பாதுகாப்புடன், பெப்ரவரி 26ஆம் நாள் சந்தேக நபரான புலனாய்வு அதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலைப்படுத்துமாறு, கடற்படை கேட்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தான் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, அட்மிரல் கரன்னகொட அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார் என சட்டவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட  சம்பவத்துடன் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொடவுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதான முக்கியமான சான்று அறிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த போதும், அவரைக் கைது செய்வதற்கு இன்னமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைகள் தொடர்பாக தனக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என்று தம் மீதான குற்றச்சாட்டுகளை அட்மிரல் கரன்னகொட கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

அவரது முன்னாள் கடற்படைச் செயலர் றியர் அட்மிரல் ஷேமல் பெர்னான்டோ,  உள்ளிட்ட பல சாட்சிகள்   இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் சாட்சியம் அளித்த பின்னரே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

2018 செப்ரெம்பர் 17ஆம் நாள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்த அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் உள்ள கன் சைட் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது தெரியும் என்று றியர் அட்மிரல் ஷேமல் பெர்னான்டோ,  ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

அவர்களை விடுவிக்குமாறு அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, அட்மிரல் கரன்னகொடவை அணுகிய பின்னர்,  கடத்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோருடன் தொடர்பாளராக தான் இருந்தையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், தனக்கு கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பாக தான் உடனடியாக அறிந்திருக்கவில்லை என்று அட்மிரல் கரன்னகொட கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *