கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு நவீன கப்பலை வழங்குகிறது ஜப்பான்
சிறிலங்காவின் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, ஆதரவளிக்க முன்வந்துள்ள ஜப்பான், இதற்காக கப்பல் ஒன்றையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ராரோ சொனோரா நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு கருத்தரங்கு தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது, கவனம் செலுத்தப்பட்டது.
சிறிலங்கா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய, கடலோரப் பாதுகாப்பு பயிற்சிகளை அளிப்பதற்கான நவீன கப்பல் ஒன்றை வழங்குவதற்கும், ஜப்பானிய பிரதமரின் ஆலோசகர் இணக்கம் தெரிவித்துள்ளார்.