கூட்டமைப்பின் கையில் அரசின் ‘குடுமி’ – வரலாற்றில் முதல்முறை
சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
“பொதுத்தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொண்டு தான், மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார். அந்தப் பதவில் நீண்ட நாட்கள் அமர்ந்திருப்பது அவரது நோக்கம் அல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு மகிந்த ராஜபக்ச இணங்கவில்லை. அதனால் தான், அவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தனர்.
கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு இணங்கி அரசாங்கத்தை அமைப்பதற்கு மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை.
சிறிலங்கா வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தப் போகிறது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குப் பெரும்பான்மை தேவை என்பதால், கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ரணில் விக்கிரமசிங்க இணங்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.