மகிந்தவின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு
மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும், பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் சார்பில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நீக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதியரசர் ஈவா வணசுந்தர தலைமையிலான, மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
எனினும், இந்த மனுவை நீதியரசர் ஈவா வணசுந்தர பங்கேற்காத- உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழுவே விசாரிக்க வேண்டும் என்று தேக உள்ளிட்ட தரப்புகள் நேற்று மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
மகிந்த ராஜபக்சவின் சட்டக்கல்லூரித் தோழியான நீதியரசர் ஈவா வணசுந்தர, மகிந்த ராஜபக்சவினாலேயே உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
இருவரும் நெருங்கிய நட்புள்ளவர்கள் என்பதால், மகிந்த ராஜபக்சவின் மனுவை நீதியரசர் ஈவா வணசுந்தர விசாரிக்கக் கூடாது என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.