இன்று நீதிமன்றில் முன்னிலையாவாராம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகப் போவதாக கூறியுள்ளார்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தார், அவர் தப்பிச் செல்ல உதவினர் குற்றம்சாட்டப்பட்டுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.
எனினும் அவர் விசாரணைக்கு முன்னிலை ஆகவில்லை.
இந்தநிலையில் அவர், நேற்று விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு தனக்கு அதிகாரபூர்வமாக அழைப்பாணை விடுக்கவில்லை என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
“குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபரோ, காவல்துறை மா அதிபரோ, அல்லது பாதுகாப்புச் செயலரோ இதுபற்றி எனக்கு அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருப்பதாக, நாளிதழ்களில் பார்த்தே தெரிந்து கொண்டேன்.
எனினும், இன்று நான் நீதிமன்றத்தில் முன்னிலையாவேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும், காவல்துறை அதிகாரி நிசாந்த சில்வா, அட்மிரல் விஜேகுணரத்னவை, நேற்று விசாரணைக்கு வருமாறு கடந்தவாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.