சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு 50 முன்னாள் எம்.பிக்களுடன் வெளியேறினார் மகிந்த
சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி இன்று சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டார்.
விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம் கட்சியின் உறுப்புரிமை அட்டையை மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி- பொதுஜன முன்னணியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் உறுப்பினர் அட்டைகளை மகிந்த ராஜபக்ச வழங்கினார்.
நாமல் ராஜபக்ச, சி.பி.ரத்நாயக்க, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரசன்ன ரணவீர, சுதர்சனி பெர்னான்டோ புள்ளோ, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, அருந்திக பெர்னான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, மகிந்த யாப்பா அபேவர்த்தன, ஜனக பண்டார தென்னக்கோன், றோகித அபேகுணவர்த்தன உள்ளிட்ட பலரும் இன்று சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டனர்.
மகிந்த ராஜபக்சவுடன் சுமார் 50 வரையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுஜன முன்னணியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் போட்டியிடுகிறார் மகிந்த
அதேவேளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மகிந்த ராஜபக்ச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த முறை குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.