மேலும்

வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டம்?

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என்று, சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐதேகவில் இருந்து கட்சி தாவி, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்றுள்ள அவர், மேலும் கருத்து வெளியிடுகையில்,

“இடைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை சமர்ப்பித்து, அதனை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதே இப்போது புதிய அரசாங்கத்தின் அவசர தேவையாக உள்ளது.

நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் அங்கீகரிக்காவிட்டால், அரசாங்கத்தினால் செயற்பட முடியாத நிலை ஏற்படும்.

அப்படியான நிலையில் நாட்டைக் குழப்ப நிலையில் இருந்து மீட்க, சிறிலங்கா அதிபரால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட முடியும்.

அது சட்டத்தில் எழுப்படவில்லை. ஆனால் வெஸ்ட் மினி்ஸ்டர் முறையில் அது நடைமுறையில் உள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு சிறிலங்கா அதிபர் நான்கரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை.

2015இல் ஐதேகவின் சார்பில் 105 நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவாகினர். ஆனால் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், அது 40 தொடக்கம் 50 பேராக குறைந்து விடும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *