‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தன்னைக் கொலை செய்யும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருப்பதாக, நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
நேற்றுக்காலை இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது. அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, இந்தியத் தூதுவருக்கு சிறிலங்கா அதிபர் விளக்கிக் கூறியதாகவும், இதுபற்றி வெளிவந்துள்ள ஊடகச் செய்திகள் அடிப்படையற்றவை என்றும், தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவினால், நேற்று நேற்றுமாலை வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இந்தியத் தூதுவரிடம் சிறிலங்கா அதிபர் விடயங்களைத் தெளிவுபடுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.