நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் பிரதான கடற்படைத் தளத்தை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு, உயர்தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு பொறிமுறைகள் நிறுவப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்“ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் நடந்த மாநாட்டில், உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, இதுபற்றித் தெளிவுபடுத்தியுள்ளார்.
“சீனர்களால் பயன்படுத்தப்படுவதால் இது ஒரு சீனாவின் தளமாக மாறும் என்ற உணர்வு இருக்கிறது. இது ஒரு ஊகம் மட்டுமே. அம்பாந்தோட்டை துறைமுகம் வணிகத் துறைமுகமாகவே உருவாக்கப்பட்டது. எதிர்காலத்திலும் அது சேவைத் துறைமுகமாகவே இருக்கும்.
இது சீனர்களுக்கு ஏன் சாதகமாக உள்ளதெனின், இந்தக் கடல் வழியினால் பயணம் செய்யும் பெரும்பாலான கப்பல்கள், சீனாவினுடையதே. இந்த துறைமுகத்தில் சீனா முதலீடு செய்வதற்கு .இதுவே காரணம்.
நான் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த போது, சிறிலங்கா வட்டத்துக்குள் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. முக்கியமாக, துறைமுகத்தை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடற்படைத் தளம், நாடெங்கும் உள்ள , சிறிலங்கா கடற்படையின் ஏனைய தளங்களை விட மிகப்பெரிய தளங்களில் ஒன்றாக இருக்கும்.” என்றார்.