20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் 36 பிரிவுகளுக்கு பொதுவாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம்
ஜேவிபியினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின், 38 பிரிவுகளில், 36 பிரிவுகளை சட்டமாக்குவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், பொதுவாக்கெடுப்பின் மூலமும் அங்கீகாரமும் பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டவரைவின் முதலாவது மற்றும் 38ஆவது பிரிவுகள் மாத்திரம், அரசியலமைப்புக்கு் உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதுடன் தொடர்புடைய, ஏனைய- 2 ஆவது தொடக்கம், 37 ஆவது பிரிவு வரையான- 36 பிரிவுகளையும், பொதுவாக்கெடுப்பில் மக்களின் முன் வைக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.