சிறிலங்கா, இந்திய கடற்படைகளுடன் ஜப்பானிய கடற்படை கூட்டுப் பயிற்சி
சீனாவின் கடல்சார் செயற்பாடுகள் அதிகரித்துள்ள இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளுடன், ஜப்பானிய கடற்படையினர், கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதாக, ஜப்பானின் என்எச்கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் மிகப் பெரிய நாசகாரி கப்பலான ககா, மற்றொரு நாசகாரி கப்பலான இனாசுமாசுவுடன், கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டது.
சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியின் போது, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல்படையின் அதிகாரிகளும், ககா போர்க்கப்பலில் இருந்தனர்.
கடலில் காயமடைந்தவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, ககா போர்க்கப்பல் நேற்று இந்தியக் கடற்படையுடன் சுமார் 10 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
நீர்மூழ்கிகளை கண்டறிதல், ஆட்டிலறிகளை ஏவுதல் மற்றும் ஏனைய தாக்குதல்கள் குறித்த மூலோபாய ஒத்துழைப்புகள் குறித்து இந்தப் பயிற்சியின் போது கவனம் செலுத்தப்படும்.
சீனா தனது நீர்மூழ்கிகளையும் ஏனைய கப்பல்களையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழியான இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது.
ஏனைய நாடுகளின் கடற்படைகளின் ஒத்துழைப்புடன், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கு ஜப்பானி்னால் பங்களிப்புச் செய்ய முடியும் என்று, ஜப்பானிய கடற்படையின், 4 ஆவது, பாதுகாப்பு அணியின் கட்டளை தளபதி றியர் அட்மிரல் டட்சுயா புகுடா,தெரிவித்துள்ளார் எனவும் ஜப்பானின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது,