முல்லைத்தீவில் நிலக்கடலை அறுவடை வலயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, கணேசபுரம் பகுதிகளை உள்ளடக்கியதாக 200 ஏக்கர் பரப்பளவிலான, நிலக்கடலை அறுவடை வலயத்தை, சிறிலங்கா விவசாய அமைச்சு உருவாக்கியுள்ளது.
இறக்குமதி செய்யாமல், சிறிலங்காவுக்குத் தேவையானளவு நிலக்கடலையை உற்பத்தி செய்யும் வகையில் இந்த வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும், நுகர்வுத் தேவைக்கு அது போதுமானதல்ல. இதனால், ஆண்டு தோறும், 4000 மெட்றிக் தொன் நிலக்கடலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
நிலக்கடலை இறக்குமதிக்கா, 2017ஆம் ஆண்டில், 703 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
விவசாய அமைச்சின் தகவல்களின் படி, நிலக்கடலை விவசாயி ஒருவரால், ஆண்டுக்கு 420,000 ரூபாவை வருமானமாகப் பெற முடியும்.
விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ், சிறிலங்கா அரசாங்கம், முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக. 950 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ள சிறிலங்கா அரசாங்கம்,விவசாய கருவிகளையும் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது.