சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு, சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகள் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமானும், செந்தில் தொண்டமானுமே, நேற்று காவேரி மருத்துவமனைக்குச் சென்று கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்து கொண்டனர்.
அத்துடன், கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வாழ்த்து தெரிவித்து சிறிலங்கா அதிபர் கொடுத்தனுப்பிய கடிதத்தையும், அவர்கள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர்.
இவர்களுடன், சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் கிருஷ்ணமூர்த்தியும் காவேரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அதேவேளை, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.