எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை
எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அனைத்து முன்னாள் தூதுவர்களும் பங்கேற்றனர் என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியுள்ளோம். எமது ஆட்சிக்காலத்தின் போது, நாங்கள் எங்கே தவறு செய்திருக்கலாம் என்று நாட்டின் தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தோம்.
எதிர்கால வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றிய தனது எண்ணங்களைச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் தூதுவர்களிடம் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார்.
முன்னாள் தூதுவர்கள் தாம் பணியாற்றிய நாடுகளின் புவியியல் பிராந்தியங்களின் அடிப்படையில் பல்வேறு குழுக்களைத் தமக்கிடையில் உருவாக்கியுள்ளனர்.
ஆசியாவில் பணியாற்றிய தூதுவர்கள் ஒரே குழுவாக இருக்கின்றனர். அவர்களின் எண்ணங்களை முறைப்படுத்தவதற்காக அவர்களை நான் மாதம் தோறும் சந்திப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.