மேலும்

காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே தங்கியுள்ளது – சாலிய பீரிஸ்

காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே (political will) தங்கியுள்ளது என்று, அந்தப் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நாடாளுமன்றச் செய்தியாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“காணாமல் போனோருக்கான பணியகம், 12 பிராந்திய பணியகங்களை திறக்கவுள்ளது.  இவற்றில் ஐந்து வடக்கிலும், மூன்று கிழக்கிலும் அமைக்கப்படும்.

விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கே பிராந்திய பணியகங்கள், அமைக்கப்படுகின்றன.

சிறிலங்காவில் காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முழுமையான தரவுகள் கிடையாது. இந்த எண்ணிக்கை, தெற்காசியாவிலேயே மிக அதிகமானதாக இருக்கக் கூடும்.

காணாமல்போனவர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கான உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்காலத்தில் எங்கள் பணியகம் மூலம் இதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

காணாமல் போனவர்கள் தொடர்பான 13,000 ஆவணங்களை, முன்னைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.

இப்போது நாங்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம். ஆனால், காணாமல் போனோரின் நிலையைக் கண்டறிவது ஒரு நீண்டகாலச் செயற்பாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *