மேலும்

கோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

”என் அனுபவங்களைக் கொண்டு, இந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நான் ஒரு செய்தியை வழங்க விரும்புகிறேன்.

நாட்டின் தலைவர் பதவிக்கான எமது எதிர்கால வேட்பாளர்  இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ள முடியும்.

அவ்வாறான ஒருவருக்குத் தான், நாட்டைப் பற்றிய போதிய அறிவு இருக்கும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு அனுபவம் இருக்க வேண்டும்.

அதனால் தான்  நான் கூறுகிறேன்,  நாட்டின் தலைவராக இருக்கப் போகிறவர், குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபை உறுப்பினராகவேனும் இருந்திருக்க வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது.

நாட்டின் சுதந்திரமும், ஜனநாயகமும், பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்க வேண்டும். எல்லா மக்களும் எந்த அச்சமும் இன்றி உறங்குகின்ற நிலை இருக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக நிறுத்தும் முனைப்புகள் கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, குமார வெல்கம இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

குமார வெல்கவின் இந்தக் கருத்து, கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு கூட்டு எதிரணிக்குள் எதிர்ப்புகள்  இருப்பதை, வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *