மேலும்

33 பற்றாலியன்களைக் கலைக்கிறது சிறிலங்கா இராணுவம்?

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் 25 வீதத்தினால் படைக்குறைப்பு செய்யப்படவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா இராணுவத் தளபதியின் பணியகத்தில் இருந்து. 2018 ஜூன் 14ஆம் நாள், அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், இந்தப் படைக் குறைப்புக்களான முக்கியமான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டுதலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, 14 நிரந்தர பற்றாலியன்களும்,  19 தொண்டர் படை பற்றாலியன்களுமாக, மொத்தம் 33 பற்றாலியன்கள் கலைக்கப்படவுள்ளன.

100இற்கு மேற்பட்ட இராணுவ முகாம்களும் தளங்களும் கைவிடப்படவுள்ளன.  இவற்றில் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ளன.

சுமார் 25 ஆயிரம்  வரையிலான, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் படையினரும், படைக்குறைப்பு செய்யப்படவுள்ளனர் அல்லது ஓய்வு அளிக்கப்படவுள்ளனர்.

இந்தப் படைக்குறைப்பினால், போருக்குப் பிந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2019 டிசெம்பரில் அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா இராணுவத்தின் அளவு குறைக்கப்படவுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *